மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
1. சிவபுராணம்
திருப்பெருந்துறையில் அருளியது
சிவனது அநாதி முறைமையான பழமை
தற்சிறப்புப் பாயிரம்
கலிவெண்பா
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழிஆண்ட குருமணி தன்தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க
10
ஈ.சன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
நேசன் அடிபோற்றி சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப்பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறை நம்தேவன் அடிபோற்றி
15
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவன்அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓயஉரைப்பன் யான்
20
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்துஎய்தி
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்து எல்லை இலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றுஅறியேன்
25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாரவ சங்கமத்துள்
30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டுஇன்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயாஎன வோங்கி ஆழ்ந்துஅகன்ற நுண்ணியனே
35
வெய்யாய் தணியாய் இயமானனாம் விமலா
பொய்ஆயின எல்லாம் போய்அகல வந்தருளி
மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனம்களிய நின்ற மறையோனே
45
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்புஅறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர்ஐந்து உடையாய் விண்ணோர்கள்ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்துஎங்கும் புழுஅழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப்புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய
55
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள்உருகும்
நலம் தான்இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள்காட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
60
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனார் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றுஅறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேசஅருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப்
65
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈ.ர்த்துஎன்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுஉணர்வார் தம்கருத்தில்
75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்உணர்வே
போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே
காக்கும் என்காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்உணர்வாய்
80
மாற்றமாய் வையகத்தின் வெவ்வேறே வந்துஅறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குஉடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம்ஐயா அரனேஓ என்றுஎன்று
85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டுஇங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டுஅழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
90
அல்லல் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
95
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com